Monday, October 11, 2010

2020-ல் இந்தியா?


அர்த்தநாரீஸ்வரரின் ஆளுகைதான் இங்கு
எங்கும் தலைவிரித்து ஆடுகிறதோ என்று
எண்ண தோன்றுகிறது.
"மேல் தட்டு மன்னர் - அடித்தட்டு மக்கள்
விண்வெளி வெள்ளோட்டம் - வயல்வெளி வெள்ள ஓட்டம்
வெள்ளம் - வறட்சி"
இன்னும் பட்டியல் ஏராளம்,

2020-ல் இந்தியா?

இந்திய தேசம் வல்லரசு ஆகிவிடலாம்,
ஆனால் என் இனத் தமிழன் அன்றும் ஏர்பூட்டி
வயற்காட்டிற்குத்தான் நடந்து கொண்டிருப்பான் .
"அவன் அடுத்த வேலை சோற்றுக்கு!"

"அவன் கண்டவையோ ஏராளம்,
வறட்சியில் பட்டினிச்சாவு,
வெள்ளத்தில் பொட்டலச்சோறு,
அழுகிய பயிர்கள், உணவிற்கு எலிக்கறி,
இன்னும் எத்தனையோ!"

"எல்லாவற்றையும் தாண்டி,
அவன் தன் வாழ்க்கையை தொடங்கிய தொலைவிலேதான்
இன்றும் இருக்கிறான், முன்னேற்றம் இன்றி!
"தமிழகத்தின் மீது சோக ரேகைகள்
இன்றும் படர்ந்து கொண்டுதான்
இருக்கின்றன - வறண்ட நதிகளாய்!"

இந்தியா முன்னேறுகிறது?
ஆம் இந்தியா முன்னேறுகிறது.

"மென்பொருள் தயாரிக்கும் இந்தியனுக்கோ
மாதத்திற்கு பல லகரங்கள்,
உணவுப்பொருள் உற்பத்தியாக்கும்
இந்தியனுக்கு?
வருடந்தோறும் அரசாங்கம் தரும்
இழப்பீட்டு தொகைதான் - அவன்
வருட வருமானமோ?....."

"உழவனின் அரிசி என்ன
அற்பமாகிவிட்டதா?
மறந்துவிட்டாயா மனிதனே,
உன் இறப்பிலும் கூடவருவது
வாய்க்கரிசிதான்!"

தோழனே, நம் நாடு 2020-ல் வல்லரசாகிவிடும்,
அதில் ஐயமில்லை - அன்று
நம் உழவுத்தோழனை
சிற்றரசனாக்க வேண்டாம்,
ஒரு சராசரி மனிதனாகவாவது
அவன் களிப்பாக வாழட்டுமே?

No comments:

Post a Comment