
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கலைஞரின் `பொன்னர் சங்கர்’ திரைப்பட தொடக்க விழாவில் காவியக் கவிஞர் வாலி வாழ்த்திப் பாடிய கவிதை..
சக்கர நாற்காலியில் உலாவரும்
சர்க்கரைத் தமிழே!
உன்னைத் - தனக்கான
உலகத் தலைவன் என -
ஆராதிக்கிறது
அக்கரைத் தமிழே!
எங்கள் மண்
என்னும் பெண்
மங்கலம் காக்கும்
குங்குமச் சிமிழே!
நீ மட்டும் இல்லையெனில் - புகழ்
நீண்ட இனத்தாரின் -
நிலையும் கலையும்
நீர்க்குமிழே!
***
உனது பேனா - ஓர்
உறை வாள்; அதன்
உள்ளே தமிழ்த்தாய்
உறைவாள்!
முடை நாற்றமெடுக்கும்
மூடத் தனங்களின்
முனைகள்
முறியுமா தானா? - அவற்றை
முறித்திருக்கிறது -
மூனா கானா பேனா!
***
உலகத் தமிழினம்
உன்னைத் தான் தொழுகிறது;
அதிசயமில்லை; உன் பேனாதானே
அவர்க்காக அழுகிறது!
உலக
உருண்டையில் -
ஒரு மூலையில் உள்ள
ஒரு தமிழனுக்கு -
ஜலதோஷம் என்றால் - உனக்குத்
தும்மல் வருகிறது; அவனுக்கு
சந்தோஷம் என்றால் - உனக்குத்
துள்ளல் வருகிறது!
***
தாழ்ந்திருந்தது
தமிழன் தகத்து; அதை
உயர்த்தியது
உந்தன் எழுத்து!
உன் தமிழெனும் சம்மட்டியால்
தகர்த்திருக்கிறாய்,
எத்துணையோ தடவை
எம்தமிழரின் கால்களில்
இலங்கை - மாட்டிய
விலங்கை!
ஒருநாள் - நீ
உண்ணா நோன்பிருந்து
நீக்கினாய் சோறை;
நிறுத்தினாய் போரை;
உண்மையில் நீதான்
உலகத் தலைவர்;
அடுத்தவரெல்லாம்
அப்படிச் சொல்லி அலைவர்!
***
உன்
வருகைக்கு முன் ...
மடமையெனும்
மலச்சிக்கலில் -
தவித்துக் கிடந்தது
தமிழ் சினிமா: அதன்
குடல் சுத்தமாக - நீதான்
கொடுத்தாய் இனிமா!
***
தமிழின்
தகத்தகாயமான
உயரங்களை
உனது -
வசனம் தொட்டது; தமிழுக்கு
விசனம் விட்டது!
***
தித்திக்கத்
தித்திக்க - நீ
தீட்டிய
தீந்தமிழ் -
உரையாடல்களை
உச்சரித்த
உதடுகளுக்கு வந்தது
சர்க்கரை வியாதி; தமிழ்
உலகுக்கு வந்தது
சமூக நீதி!
***
நீ
தமிழுக்கும்;
தமிழ் மண்ணுக்கும்
பண்ணிய தொண்டுகளை
எண்ணினால்...
எம்மநோக்கு வருகிறது
நன்றிக் காய்ச்சல்;
நன்றி இல்லார்க்கு வருகிறது
பன்றிக் காய்ச்சல்!
***
திரும்பவும் கலைஞரின் பேனா
திறக்கிறது மூடி; அது
புதுரத்தம்
பாய்ச்ச -
கும்மென்றிருக்கும்
கோடம்பாக்கத்தின் நாடி!
கலைஞரின்
கைவண்ணத்தில் வரும்
‘பொன்னர் சங்கர்’ - ஒரு
வின்னர் சங்கர்!
கலைஞர் எழுப்பியது
உளியின் ஓசை;
வாலி எழுப்புவது
ஜால்ரா ஓசை;
விருது பெரும் ஆசை?
வேண்டாம் பேராசை! ( நன்றி: Kasu Sobhana)
No comments:
Post a Comment